Question & Answer – 48

ஐயம் தெளிதல்

தத்துவ விசாரம்

கேள்வி எண் 48: ஒரு மனிதன் ஒரு நாளைக்கு எண்ணுகிற எண்ணங்களுக்குக் கணக்கேயில்லை. ஆனால் மனிதன் உயிர் துறக்கும்போது எண்ணுகிற எண்ணம் எதுவோ அதுவாக அடுத்த பிறவி வந்து வாய்க்கிறதென்று கைவல்யத்தில் சொல்லியிருக்கிறது. பகவத்கீதையில் நீண்டநாள் சொர்க்கத்தில் தேவபோகங்களை அனுபவித்துவிட்டுப் புண்ணியம் தேய்ந்த பிறகு மறுபிறவி எடுக்கிறான் என்று சொல்லியிருக்கிறது. ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஒரு பிறவி எடுத்தாக வேண்டுமா? கைவல்யம், பகவத் கீதை இவைகளில் சொல்லியிருக்கும் மறுபிறப்பைப் பற்றி விளக்க வேண்டுகிறேன்.

பதில்: மனிதனுக்கு வினை இருக்கும் பரியந்தம் பிறவி உண்டு. வினைக்கு மூலகாரணமாய் இருப்பது எண்ணம். ஓர் எண்ணத்தை எண்ணும்பொழுதே சூக்ஷ்ம நிலையில் அது ஒரு வினை ஆய்விடுகிறது. எண்ணத்துக்கு ஏற்றாற்போன்று வாழ்க்கை மாறி அமைந்து வருகிறது. ஸ்தூல சரீரம் ஒன்றில் இருக்கின்ற காலம் முழுதையும் தொகுத்து ஒரு பிறவி என்று சொல்லுவது உலக வழக்கு. ஆனால் தத்துவ பூர்வமாகப் பார்க்குமிடத்து ஓர் எண்ணத்தை எண்ணும்பொழுதே அந்த எண்ணமயமான புதிய பிறவி மனத்தகத்து அம்மனிதனுக்கு அமைந்துவிடுகிறது. எனவே ஒரு நாளில் ஒரு மனிதனுடைய மனதில் எத்தனைவித எண்ணங்கள் வந்தமைகின்றனவோ அத்தனைவிதமான பிறவிகளை அந்தச் சிறிது நேரத்துக்குள் மன அமைப்பில் அவன் எடுத்தவனாகிறான். இப்படி உண்டாகின்ற பிறவிகளைத்தான் கணக்கெடுக்க யாருக்கும் இயலாது.

இனி, ஓர் உடலை உகுக்கின்ற வேளையில் அந்த ஜீவன் அது பரியந்தம் ஆழ்ந்து எண்ணிய எண்ணங்கள் ஒன்றுகூடி மனதுக்கு ஒரு வடிவைத் தருகின்றன. மேற்போக்காக எண்ணிய எண்ணங்களுக்கு ஆங்கு இடமில்லை. கடலில் உண்டாகிய சிற்றலைகள் போன்று அவைகள் மறைந்து போய்விடுகின்றன. மனத்தகத்து உண்டாயிருக்கின்ற ஆழ்ந்த வடிவுக்கு ஒப்ப புதிய ஸ்தூல சரீரம் அமைகிறது. சாகின்றபொழுது தான் விரும்புகிற ஓர் எண்ணம் முன்னிலையில் வந்து நிற்காது. தான் நெடுங்காலம் எண்ணிய எண்ணங்களின் தொகையே முன்னணியில் வந்து நிற்கும். அதற்கேற்ற படி அடுத்த பிறவி அமைகிறது. ஆண்டு முழுதும் செய்த வியாபாரத்தின் தொகுப்பை ஆண்டு இறுதியில் கணக்குப் பார்த்து லாபநஷ்டத்தை முடிவு கட்டுவது போன்று வினையின் தொகையை முன்னிட்டே அடுத்த பிறவி அமைகிறது.

வினைக்கு ஏற்பச் சூக்ஷ்ம சரீரத்தில் வேறு ஒரு நிலையில் ஜீவன் இருப்பதுண்டு. அந்த நிலை இன்பகரமானதாயிருந்தால் அதைச் சொர்க்க வாழ்வு என்கிறோம். துன்பகரமானதாயிருந்தால் நரகம் என்கிறோம். சொர்க்கமும், நரகமும் கனவு உலகங்களுக்கு ஒப்பானவை. ஸ்தூல சரீரத்தின் துணையின்றிக் கனவு நிலையில் இன்பத்தையோ துன்பத்தையோ ஜீவன் அனுபவிக்கின்றான். அந்தச் சரீரம் அனுபவிக்கின்ற இன்ப  துன்பமும் வினைப்பயனேயாம். கனவு முடிந்ததும் அவன் விழித்துக்கொள்வது போன்று சொர்க்க வாழ்வுக்கு ஏற்ற வினை முடிவுறுங்கால் அவ்வாழ்வை முடித்துவிட்டுத் திரும்பவும் மண்ணுலகில் ஒரு மனிதன் பிறக்கிறான். எனவே பல சாஸ்திரங்கள் சொல்லுகின்ற கோட்பாடுகளைத் தொகுத்து ஆராயுமிடத்துத் தனது எண்ணத்துக்கு ஏற்ப மனிதன் தனது வாழ்வை ஓயாது மாற்றி அமைத்துக் கொண்டு போகின்றான். மாறி அமைகின்ற நிலைக்கே மறுபிறப்பு என்று பெயர். எண்ணங்களற்ற பெருநிலையை ஆத்மா அடைந்துவிடுமிடத்து அது முக்தியாகிறது.

தெளிவித்தவர்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

Leave a comment